ஸ்ரீ முத்தாலம்மன் கோவில்:-

ஸ்ரீ முத்தாலம்மன் கோவில்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் அழகிய கிராமம் ஆக  ஜமீன் கோடங்கிபட்டி அமைந்துள்ளது. விளாத்திகுளத்திலிருந்து மதுரை ரோட்டில் சரியாக 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஜமீன் கோடங்கிபட்டியின் பழைய பெயர் விஸ்வநாதபுரம் ஆகும்.
ஸ்ரீ முத்தாலம்மன் கோவிலை அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து வணங்கி மழைக்கஞ்சி ஊற்றினால் மழை பெய்யும் என்பது ஐதீகமாகும். இந்த ஊரின் காவல் தெய்வமாக சூரியன் உதிக்கும் திசையான கிழக்கில் இந்த கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் 3வது புதன் கிழமை அன்று இந்த கோவிலுக்கு மழைக்கஞ்சி ஊற்றுவார்கள். இதை எதிர் பார்த்துதான் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் விதைக்கவே ஆரம்பிப்பார்கள். ஊரின் நடுவே அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் இருந்து பெண்களின் குலவை சத்தத்துடன்,மேள தாளத்துடன்,சாமி ஆட்டத்துடன்,அனைத்து பொது மக்களும் அவர் அவர் வீட்டில் இருந்து மஞ்சள் நீர் குடத்துடன்,வீதி உலா வருவர். தாங்கள் படைக்க இருக்கும் பிரசாதங்களையும் கொண்டு வருவர். பின்பு அனைத்து பிரசாதங்களையும், மற்றும் மழைக்கஞ்சியையும் கலந்து பக்த பெருமக்களுக்கு கொடுப்பார்கள்.