எலி மருந்து சாப்பிட்டவர் சாவுக்கு பயந்து மருத்துவமனைக்கு ஓடிய சம்பவம்?!

எலி மருந்து சாப்பிட்டவர் சாவுக்கு பயந்து மருத்துவமனைக்கு ஓடிய சம்பவம்?!
விழுப்புரம் அருகே பணம் பத்து கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 28). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருக்கு சாந்தி (25) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தி தனது குழந்தைகளுடன் புதுவை உருளையன் பேட்டையில் உள்ள தாய் வீட்டுக்கு வந்திருந்தார். ராஜேஷ் மனைவி– குழந்தைகளை பார்க்க மாமியார் வீட்டுக்கு வந்திருந்தார். மாலையில் புதுவை கடற்கரையை சுற்றிப் பார்க்க மனைவியை அழைத்தார். ஆனால், சாந்தி வர மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த ராஜேஷ் மாமியார் வீட்டில் இருந்து வெளியேறினார்.
பின்னர் மருந்து கடைக்கு சென்று எலி மருந்து மற்றும் கரப்பான் பூச்சி கொல்லி மருந்தை வாங்கினார். கடற்கரை சாலைக்கு வந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து 2 மருந்துகளையும் ஒன்றாக கலந்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி– மயக்கம் ஏற்பட்டது. பிறகு மனம் மாறிய ராஜேஷ், சாவுக்கு பயந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள விறுவிறுவென புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கிருந்த டாக்டர்களிடம் நடந்த விவரங்களை கூறி தனது உயிரை காப்பாற்றும்படி கதறினார். இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் ஆபத்தான நிலையை தாண்டி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் ராஜேஷ் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சில செய்திகள் நான் படித்தது நீங்கள் அறிந்திட:-

 சர்க்கரையானது உடலில் ஜீரண சக்தியை பாதிக்கிறது. எண்ணற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது

சர்க்கரையானது உடலில் ஜீரண சக்தியை பாதிக்கிறது. எண்ணற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு, உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், நீரிழிவு நோய் இப்படி எல்லாநோய்களுக்கும் சர்க்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாகிறது.சர்க்கரையை உபயோகிப்பதன் மூலம் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைகிறதாம். புரதச்சத்து அளிக்கப்படுகிறது. விட்டமின் சி சத்து உறிஞ்சப்படுகிறது. தாது உப்புக்கள் அழிக்கப்படுவதால் உடலானது எளிதாக நோய்  தாக்குதலுக்கு ஆளாகும் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள் இனிப்பும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரித்து விடுவதால், இதய நாளங்கள் அடைபடுகின்றன.நம்முடைய உடம்பின் ஆரோக்கியத்தை மெல்லக் கொல்லும் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

பாலியலுக்கு மறுத்த 19 பெண்களுக்கு மரணதண்டனை
ஐ.எஸ். தீவிரவாதிகள், தமது குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் பாலியல் உறவை வைத்துக் கொள்ள மறுத்த 19 பெண்­க­ளுக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக குர்திஷ் ஜனநாயகக் கட்சியின் பேச்சாளரான செயித் மிமோஸினி தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட ஈராக்கிய மொசூல் நகரில் அந்தப் பெண்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பாலியலுக்காக பெண்கள் விற்கப்படுவது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் பிரதிநிதியொருவர் கூறுகையில், பெண்கள் பெட்ரோல் பீப்பாக்கள் போன்று விற்கப்பட்டு வருவதாகவும் இதன் போது விற்கப்படும் பெண்ணொருவரை 6 வெவ்வேறு ஆண்கள் வாங்க முடிவதாகவும் தெரிவித்தார்.இந்நிலையில் மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு உட்படுத்தப் பட்ட 19 பெண்களும் யஸிடி இனத்தவர்களா இல்லையா என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

தீவிரவாதிகளால் தலையைத் துண்டித்து மரணதண்டனை
நைஜீரியாவின் பொர்னோ மாநிலத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் என நம்பப்படும் ஒருவருக்கு போகோ ஹராம் தீவிரவாதிகள் தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றுவதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சி நைஜீரியாவில் செயற்படும் ஜிஹாதிகளால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 178 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே இந்த 8 நிமிட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சியானது ஐ.எஸ். தீவிரவாதிகளால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகளை ஒத்ததாக அமைந்துள்ளது.


பீகாருக்கும் நீங்கதான் பிரதமர் - மோடிக்கு நிதீஷ் குமார் பதிலடி!
பாட்னா: பீகாருக்கும் மோடிதான் பிரதமர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார் பிரதமர் மோடி, என பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் கயாவில் நடந்த பேரணியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுகையில் பீகார் நோயாளியாக உள்ளது, காட்டு தர்பார் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புங்கள் என நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சியை சாடி பேசியிருந்தார். பிரதமரின் குற்றசாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள நிதீஷ் குமார், "பிரதமர் தன் பேச்சை திரும்பப் பெற வேண்டும் பீகாருக்கு எதுவும் செய்யாமல் நோயாளி என்று அழைத்து அவமானப்படுத்தியுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். கடந்த சில ஆண்டுகளில் பீகாரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை குறிப்பிடாமல் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். பீகாரில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால் எங்களை தேர்ந்தேடுங்கள் என்று மக்களை மிரட்டுகிறார். இதுவா கூட்டாட்சி தத்துவம்?. மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே நீங்கள் மொத்த இந்தியாவிற்கும் பிரதமர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் அளித்த அனைத்து வாக்குறுதிகளும் அவரது ட்விட்டர் பக்கத்தில் மட்டுமே உள்ளன. என்றும் அவர் சாடியுள்ளார்.

***********************************************************

தே.மு.தி.க செயற்குழு கூட்டம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்
சென்னை, கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், நிறை வேற்றப்பட்ட  தீர்மானங்கள் விவரம்:
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறுதிச் சடங்கில், பிரதமர் உட்பட, பல்வேறு தரப்பினரும் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினர். ஆனால், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை; அதற்கான, உரிய விளக்கத்தை, அவர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
மதுவால், பல குடும்பங்கள் சீரழிவது பற்றி சிறிதும் கவலைப்படாமல், அ.தி.மு.க., அரசு மது விற்பனை செய்கிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த வாய்ப்பில்லை என்றாலும், சுதந்திர தினத்தன்று, மதுக் கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைத்து, முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும். 21 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே, மது விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு, தனியார் சர்க்கரை ஆலைகள், 1,000 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன. இதை பெற்று தராமல், அரசு இரட்டை வேடம் போடுகிறது; ஒரு டன் கரும்புக்கு, 3,500 ரூபாய் வழங்க வேண்டும்.
 திருவாரூரில், விவசாய நிலங்களில், மீத்தேன் வாயு எடுக்கும் சோதனை முயற்சியில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம் ஈடுபட்டுள்ளதை, நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும்.
 மோட்டார் வாகன சட்டம், தனியாருக்கு சாதகமாகவும், பொதுமக்கள் உரிமையை பாதிப்பதாகவும் உள்ளது. இந்த சட்ட மசோதாவை, அனைத்து தரப்பு மக்களின் கருத்தறிந்து, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
 தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வளங்கள் தனி நபர்களால், சுரண்டப்படுவதை தடுக்க, மணல், தாதுமணல், கிரானைட் கல் குவாரிகளை, அரசே நேரடியாக நடத்த வேண்டும். ஆறு மாதங்களாகியும், துறைகளின் மானிய கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே, சட்டசபையை உடனே கூட்ட வேண்டும்.
 தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. போலீஸ் துணை கண்காணிப்பாளர் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவது, காவல் ஆய்வாளர் கொள்ளையடிக்கும் கும்பலுடன் சேர்ந்து கொள்ளையடிப்பது, தலைமை காவலர் கல்லுாரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற நிலை உள்ளது. இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதில், ஒரு லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, அதிக விலை கொடுத்து, தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை கைவிட வேண்டும்.
 தமிழக அரசின் கடன், நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதால், அரசால் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியவில்லை. மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கும் கொண்டு செல்ல முடியவில்லை. மோசமான நிதிநிலை உள்ளதால், அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என, மக்கள் அறிந்து கொள்ள, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.